இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: தமிழக சட்ட சபையில் தீர்மானம்: தி.மு.க வும் ஆதரவு


இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று சட்டசபையில் முன்வைத்தார். இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் தி.மு.க.வினரும் ஆதரவு தெரிவித்தனர்.
மேற்படி தீர்மானத்தை முன்வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது, 'இலங்கையில் போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இன்னமும் இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்கான அனைத்து குடியுரிமைகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையை விதித்தால் குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இந்த யோசனையை முன்வைத்திருக்கிறோம். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஒரு குழுவை நியமித்து, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தவிர, இக்குற்றங்களை உறுதி செய்யவில்லை. இலங்கை ஜனாதிபதியோ அல்லது மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை. அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். எனவே, மனிதாபிமானமற்ற முறையில்இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று ஜெயலலலிதா மேலும் கூறியுள்ளார்

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...