கோடைத்தாக்குதலை சமாளிக்க..


கோடை ஆரம்பித்து விட்டாலே உடலின் ஆரோக்கியமும் பாதிப்புக்கு ஆளாகிறது. கிளீனிக்குகளில் கூட்டம் அலைமோதுவதால் கோடை காலத்துக்கு டாக்டர்களின் சீசன் என்ற பெயரும் உண்டு.
வெப்பநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம். சில நகரங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அப்போது வெளியில் சென்றால் தலைசுற்றல், மயக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற “சன் ஸ்ட்ரோக்” பாதிப்புகள் ஏற்படும்.


உடலில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வு, தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். வைரஸ் பாதிப்பால் அம்மை, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவையும் கோடையில் தாக்குகிறது.

டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் ஏற்படுகிறது. இந்த கோடை நோய்கள் வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

ஏசி அறையில் இருந்தவர்கள் உடனடியாக வெயிலில் வெளியே செல்லக் கூடாது. சிறிது நேரம் நிழலில் இருந்து விட்டு பின்னர் செல்ல வேண்டும்.

வெயில் காலத்தில் தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், வெளியிடங்களில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்றில் பாதிப்பு ஏற்படும்.

அதேபோல் கரும்புச்சாறு குடிப்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் விற்கும் பலர் அதன் தோல் பகுதியை முற்றிலுமாக நீக்குவதில்லை. அதில் உள்ள அழுக்குகள் மற்றும் பூஞ்சைகள் கரும்பு ஜூஸில் கலக்கும் அபாயம் உள்ளது.

இதனால் வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். தெருவோர கடைகளில் வெட்டி வைத்து விற்கப்படும் பழங்களை வாங்கி சாப்பிடுவது, கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும்.

தண்ணீர், திரவ உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். தர்பூசணி, பப்பாளி பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். கோடையில் மாம்பழம் சிறந்தது என்றாலும், அதிகம் சாப்பிடக் கூடாது.

வியர்வை மூலம் உடலில் உள்ள தாதுக்கள் வெளியேறும் என்பதால், அதை ஈடுகட்ட எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். கடைகளில் விற்கப்படும் ஐஸ்கட்டிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

அதன்மூலம் காலரா, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படுகிறது. கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், தயாரித்தவுடன் சாப்பிட வேண்டும். தாமதமாக பிரிட்ஜில் வைக்கப்படும் உணவு நச்சாக மாறும் வாய்ப்பு உள்ளது. கோடையில் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், நார்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆடை விஷயத்திலும் கவனம் தேவை. மெல்லிய நிறத்தினாலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

மெத்தை, சோபாக்களில் படுப்பதை தவிர்த்து, கோரைப் பாய்களில் படுக்க வேண்டும். கோடையில் கொசுக்கள் மூலமும் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

ஏர்கூலர் பயன்படுத்துபவர்கள், அதில் பயன்படுத்தும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த தண்ணீர் மூலம் கொசுக்கள் பெருகும். வெயிலில் சுற்றுபவர்கள், தாகத்தை தணிக்க பால் சம்பந்தப்பட்ட குளிர்பானங்களை சாப்பிடுவது வழக்கம்.

இந்த குளிர்பானங்களை வைத்திருக்கும் ப்ரீசர் பெட்டியை ஒழுங்காக பராமரிக்கவில்லையென்றால் அது சலமோனெல்லா டைபி என்ற ஒருவகை டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் கனகராஜ்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...