வியர்வை பிரச்னைக்கு ?

கோடைகாலம் என்றாலே, அனைவரும் அலறுவது வியர்வைத் தொல்லைக்குதான். குறிப்பாக, பொது இடங்களில் "டீன்-ஏஜ்' முதல் 40 வயதானோர் படும்பாடு சொல்லிமாளாது. டால்கம், ப்ரிக்லி ஹீட் பவுடர், சோப் மற்றும் வாசனை திரவியங்கள் என பல தரப்பட்ட பகீரத பிரயத்தனங்களாலும், வியர்வையை தவிர்க்க முடியாமல் தவிப்பது தான், உச்சகட்ட வேதனை.

இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில், புதிய சிகிச்சை முறையை, மும்பை மருத்துவர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.ஆம். முக சுருக்கங்களை நீக்கி, இளமையை பாதுகாக்க மேற்கொள்ளப்படும், "போடோக்ஸ்' ஊசி சிகிச்சையால், வியர்வை பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, அவர்கள் கூறுகின்றனர்.மும்பையில் உள்ள பாந்த்ரா, கியூடிஸ் ஸ்கின் ஸ்டுடியோ, ஜுகுவில் உள்ள ரேடியன்ஸ் ஸ்கின் கிளினிக் மற்றும் பூலாபாய் தேசாய் சாலையில் அமைந்துள்ள பிரீச் கேண்டி மருத்துவமனை போன்றவற்றில், முறையான அனுமதியுடன், "போடோக்ஸ்' சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அழகியல் நிபுணரும், மும்பையில் உள்ள கியூடிஸ் ஸ்கின் ஸ்டுடியோ இயக்குனருமான அப்ராதிம் கோயல் கூறியதாவது:கிளாஸ்டிரிடியம் பொட்டுலினியம் எனும் பாக்டீரியாவில் இருந்து பெறப்படும் புரோட்டின் கலவை, "போடோக்ஸ்' என பொதுவான பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த, "போடோக்ஸ்' புரோட்டின் கலவையை, தேவையான அளவு, ஊசி வழியாக, அக்குள் பகுதிக்குள் செலுத்த வேண்டும். உடலில் செலுத்தப்படும் "போடோக்ஸ்', உடனடி வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி, வியர்வை சுரப்பிகளுக்கு செல்லும் தகவல் மற்றும் உற்பத்தி நரம்புகளின் செயல்பாட்டை தடுத்துவிடுகிறது. இதனால், வியர்வை சுரப்பிகளின் உற்பத்தி பணி நிறுத்தப்படுகிறது.
"போடோக்ஸ்' ஊசி போட்டுக் கொள்ள, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம். பாதுகாப்பான நிலையில், சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்க முடியும். ஒரு ஊசியில் 50 யூனிட்கள் அளவுக்கு, "போடோக்ஸ்' கலவை உடலில் செலுத்தப்படும். 30 அல்லது 40 நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். ஒருமுறை, "போடோக்ஸ்' ஊசி போட்டுக் கொள்ள 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம், ஒரே ஊசியில் தீர்வு கிடைக்காது.
ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கும் ஏற்றவகையில், ஊசிகளின் எண்ணிக்கையும் மாறுபடும். அதுபோல், அதற்கான கட்டணமும் அதிகரிக்கும். தேவைப்படும் அளவுக்கு "போடோக்ஸ்' போட்டுக்கொண்டால், அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு வியர்வைத் தொல்லை இருக்காது.பெரும்பாலும் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களே, இந்த சிகிச்சையினை மேற்கொள்ள விரும்புகின்றனர். அவர்களில், 60 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலரது உடலில் வியர்வை சுரப்பிகளின் பணியே சராசரியை விட அதிகமாக இருக்கும். பல பேருக்கு பயம் மற்றும் கவலை காரணமாக, அதிகளவில் வியர்வை சுரக்கும். ஒரு சிலருக்கு, மரபியல் அமைப்பு காரணமாக, வியர்வை சுரந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு, "போடோக்ஸ்' மூலம் தீர்வு காண முடியும். இது ஆரோக்கியமான சிகிச்சை என்றாலும், நிரந்தர தீர்வாகாது.இவ்வாறு அப்ராதிம் கோயல் கூறினார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...