வார்தா ஆசிரமம்-மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை


Sevagram Ashram at Wardhaவார்தா: மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி திருடு போயுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கண்ணாடி காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம தலைவர் எம்.எம். கத்காரி கூறுகையில், காணாமல் போன கண்ணாடி குறித்து பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பல இங்கு உள்ளன. அவை குறித்த பட்டியலும் எங்களிடம் உள்ளது. அதேசமயம், கண்ணாடி குறித்து அந்தப் பட்டியலில் குறிப்பிடாமல் விட்டு விட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

இதுவரை இதுகுறித்து போலீஸில் புகார் எதுவும் தரவில்லை என்றார் அவர். புகார் ஏதும் வரவில்லை என்பதை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். போலீஸ் புகார் கொடுக்காதது ஏன் என்று கத்காரியிடம் கேட்டால், ஆசிரம நிர்வாகிகள் கூடி முடிவெடுத்துதான் அதை தீர்மானிக்க முடியும் என்றார்.

நாக்பூரிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த வார்தா ஆசிரமம். இங்கு 1936ம் ஆண்டு காந்தியடிகள் வருகை தந்தார். பின்னர் இங்கேயே தங்கினார். இந்த ஆசிரமத்திற்கு ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...