டோர்ஜி காண்டு ?

இரண்டு ஆண்டில் இது இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து. இரண்டிலும் இறந்தது மாநில முதல்வர்கள். முதல் விபத்தில் ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்எஸ்ஆர் ரெட்டி. இப்போது அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு.
இரண்டுமே மோசமான வானிலை காரணமாக மலையில் ஹெலிகாப்டர் மோதியதால் நடந்துள்ளன. 
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள கியாங்கர் கிராமத்தில் கடந்த 1955ம் ஆண்டு டோர்ஜி காண்டு பிறந்தார்.

 மான்பா மலைஜாதியை சேர்ந்த இவர் புத்த மதத்தை சேர்ந்தவர். இளம் வயதிலேயே ராணுவத்தின் உளவுப்பிரிவில் சேர்ந்த காண்டு 7 ஆண்டு பணியாற்றினார். 1971ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் உளவு பார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார். இதற்காக அவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற காண்டு, 1980ல் சமூக சேவையில் ஈடுபட தொடங்கினார்.

 அவரது முயற்சியால், மலைப்பகுதிகளில் அமைந்திருந்த பல கிராமங்களில் குடிநீர், மின் இணைப்பு, தொலைதொடர்பு வசதி, பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டன. 
தவாங் பகுதியில் கலாச்சார சங்கம், கூட்டுறவு சங்கங்கள் தொடங்கினார். 1982ல் டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவின்போது டோர்ஜி காண்டு தலைமையிலான குழுவின் பாரம்பரிய நடனத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. 1983ல் அரசியலில் குதித்த அவர், மேற்கு காமெங் மாவட்ட கவுன்சில் துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 1990ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முக்தோ தொகுதியில் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால், 1995ல் மீண்டும் அதே தொகுதியின் எம்.எல்.ஏ.வான அவருக்கு இந்த முறை கூட்டுறவு துறை இணை அமைச்சர் பொறுப்பு கிடைத்தது.  தொடர்ச்சியாக அமைச்சராக இருந்த அவர், கடந்த 2007ல் முதல்வராக இருந்த கெகாங் அபாங்குக்கு எதிராக போர்கொடி தூக்கினார். டோர்ஜி காண்டுவை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் மறுத்தது.

 இதனால், பெரும்பாலான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் 10 நாட்கள் முகாமிட்டார். ஒருவழியாக அவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் சம்மதித்தது. 2007 ஏப்ரல் 7ம் தேதி அவர் அருணாச்சல பிரதேச முதல்வராக டோர்ஜி பதவி ஏற்றார். 2009ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அவர் மீண்டும் முதல்வரானார். 56 வயதான டோர்ஜி காண்டுவுக்கு 4 மனைவிகள், 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சனிக்கிழமை காலை தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடாநகருக்கு  ஹெலிகாப்டரில் புறப்பட்டிருக்கிறார். புறப்பட்ட 20வது நிமிடத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. கடந்த நான்கு நாட்களாக தேடி வந்தனர். ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. 

ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐந¢தாவது நாள், அடர்ந்த காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் முதல்வர், பைலட்கள் உள்ளிட்ட 5 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விமானத்துக்கு எப்படியோ, ஹெலிகாப்டரை பொருத்தவரை, மோசமான வானிலை முதல் எதிரி. மிக உயரத்தில் பறக்கும்போது, மோசமான வானிலை காரணமாக விமானம் பழுதுபட்டாலும் திறமையான பைலட்டால் சமாளித்து ஓட்டி, விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கி விட முடியும். ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால், வானிலை மோசமாக இருக்கும்போது, காட்டுப் பகுதியில் மலையில் மோதி விபத்துக்குள்ளாக அதிகம் வாய்ப்புள்ளது.

அதோடு கனமழை நேரத்தில் ஹெலிகாப்டர் பயணம் மிகவும் ஆபத்தானது. அதை பைலட்டுகள், விவிஐபிக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எடுத்து சொன்ன பிறகும் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என பைலட்டுகளுக்கு உத்தரவிடும்போதுதான் இதுபோன்ற விபத்துகள் நடந்து விடுகின்றன. பஸ், ரயிலை ஒப்பிடும்போது, விமான பயணம்தான் பாதுகாப்பானது என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. அதை உறுதி செய்யும் வகையில் பைலட்டுகளும், விஐபிகளும் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...