உண்மையில் குஜராத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?



 மிகச்சிறந்த நிருவாகம் குஜராத்தில்; தேனாறும், பாலாறும் கைகோத்து ஓடுகின்றன என்று கோயபல்ஸ் பாணியில்  குழுப்பாட்டு (கோரஸ்)ப்பாடுகின்றனரே உண்மையில் குஜராத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?
மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி ஒன்று சொன்னால் அது தெய்வவாக்கு வேதவாக்கு என்று வேதப் புரத்தார்கள் இப்பொழுதெல்லாம் மிருதங்கம் அடிக்கிறார்களே - அதே தணிக்கைத் துறைத் தலைமை அதிகாரியின் அறிக்கை, குஜராத் மாநில ஆட்சியின் நிருவாகம் குறித்து அளித்திருக்கும் சான்று என்ன?
நர்மதை அணையிலிருந்து விவசாய நிலங்களுக்குத் தண்ணீரைக் கொண்டுவர ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.18 ஆயிரத்து 515 கோடியாகும். ஆனால் இந்தத் திட்டம்  தோல்வியில் முடிந்ததாகத் தணிக்கைத்துறை அதிகாரி அடிகோடிட்டுக் காட்டியுள்ளார்.
விவசாயத்துக்கான திட்டம் இப்பொழுது வெறும் குடிநீர்த் திட்டமாக ஆகிவிட்டது. தண்ணீர்ப் பற்றாக்குறைப் பகுதிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படாமல், ஏற்கெனவே தண்ணீர் வசதி உள்ள பகுதிகளுக்கே இப்பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது.
18 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டியழுதும், 18 விழுக்காடு விவசாய நிலங்கள்தான் பயன்பெற்றன. முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பகுதிகளுக்குப் பணம் செலவழிக்கப்படவில்லை என்று தணிக்கைத்துறை கூறி இருக்கிறதே - இதற்கு என்ன பதில்?
இதுதான் மோடி அரசில் விவசாயத்துறை பெரும் பலன் பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளமா?
ஆ. இராசா விஷயத்தில் தணிக்கைத் துறை யூகத்தின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை படித்தால் அது சரிதான். அதே தணிக்கைத்துறை மோடி அரசைப்பற்றி இப்படி குற்றம் சொல்லியிருக்கிறதே. இதற்கு என்ன பதில்? மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற பழைய கதைதானா?
இன்னொரு அதிர்ச்சியான தகவல் குஜராத்திலிருந்து: குழந்தைத் திருமணம் என்னும் கொடுமையில் முதல் இடத்தில் இருப்பது குஜராத் மாநிலம்தான்; குழந்தைக் கல்வியை எடுத்துக் கொண்டால் பீகார் ஒரிசாவை விட குஜராத் மாநிலம் பின்னடைவில் உள்ளது.
(2008ஆம் ஆண்டு கல்வி அறிக்கை - இண்டியன் எக்ஸ்பிரஸ் சனவரி 15) பசிப் பிணியால் அவதிப்படுவோரின் பட்டியலிலும் குஜராத் இடம் பெற்றுள்ளது. இரத்த சோகையால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்களும் குஜராத்தில்தான் அதிகம் (தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை)
ஜவுளித்துறையிலும் தள்ளாடுகிறது. குறிப்பாக வைரத் தொழில் என்பது குஜராத்தில் மிக முக்கியமானதாகும். அந்தத் தொழில் நசிவின் எல்லைக்கே சென்று தொழிலாளர்கள் தற்கொலைக்குத் துரத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் அகமதாபாத், பல்நகர், சுரேந்திரநகர்  மற்றும் சபர்கந்தா ஆகிய நான்கு மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மாற்றத்திற்கான  உரிமைகள் என்ற அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது.
கிராமங்களில் தொழிலாளர்களாக இருந்து துன்பப்படும் குழந்தைகள்பற்றி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிர்ச்சியான தகவல்கள்! மிக மிக அதிர்ச்சியான தகவல்கள்!!
இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டவர்கள் மாணவர்கள் தாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நான்கு மாவட்டங்களில் 10 ஆயிரம் குழந்தைகள் கல்விக் கூடங்களுக்குச் செல்லவில்லை; மாறாகக் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறார்கள். அதுவும் ஆறு வயதிலேயே  குஜராத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் வேலைக்குச் செல்லும் அவலம் நிர்வாணக் கூத்தாடுகிறது.
பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மாட்டுக் கொட்டடிகளிலும்தான் இந்தப் பால பருவம் நாசமாக்கப்படுகின்றது.
இந்த ஆய்வு அமைப்பின் திட்ட மேலாளர் ராஜன் மொகந்தி கூறியது மிகவும் கவலை கொள்ளத்தக்கதாகும்.
எட்டு மாணவர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்வது என்று முடிவு எடுத்தோம். 19 ஆயிரம் மாணவர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சக குழந்தைகளைக் கொண்டே கல்விபற்றிச் சொல்லலாம் என்பதற்காகவே இந்த யுக்தி கடைப்பிடிக்கப்பட்டது.
வேலைக்குச் செல்லும் குழந்தைகள் உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வயதுக்கு அதிகமான கடுமையான பணிகள் காரணமாக முதுகு வலிக்கு அந்தச் சின்ன வயதிலேயே ஆளாகிறார்கள். இதன் காரணமாக மோசமான கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். குறிப்பாக புகையிலைப் பயன்பாடு அதிகம். அதனால் மூச்சு விடுவதில் சிரமப்படுகின்றனர்.
இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். தலையான சமூக ஆர்வ அமைப்பாகும்.
எதிர்கால மன்னர்களை மாட்டுக் கொட்டடியில் முடக்கும், பா.ஜ.க. ஆளும் - மோடியை முதல் அமைச்சராகக் கொண்டுள்ள குஜராத் மாநில அரசுதான் இந்தியாவிலேயே சிறந்த ஒரு கூட்டம் பொய்யான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...